என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! இருங்கடல் வையத்து முன்னம் நீ புரி நல்வினைப் பயன் இடை, முழுமணித்தரளங்கள் மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை, வாய் ஆரப் பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும் அதனாலே.
| [ 1]
|
விண்டு ஒழிந்தன, நம்முடை வல்வினை விரிகடல் வரு நஞ்சம் உண்டு இறைஞ்சு வானவர் தமைத் தாங்கிய இறைவனை, உலகத்தில் வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை, வலஞ்சுழி இடம் ஆகக் கொண்ட நாதன், மெய்த்தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே.
| [ 2]
|
திருந்தலார் புரம் தீ எழச் செறுவன; இறலின் கண் அடியாரைப் பரிந்து காப்பன; பத்தியில் வருவன; மத்தம் ஆம் பிணிநோய்க்கு மருந்தும் ஆவன; மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக இருந்த நாயகன், இமையவர் ஏத்திய, இணை அடித்தலம் தானே.
| [ 3]
|
கறை கொள் கண்டத்தர்; காய்கதிர் நிறத்தினர்; அறத்திறம் முனிவர்க்கு அன்று இறைவர் ஆல் இடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார்; மறைகள் ஓதுவர்; வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து, அருங்கானத்து, அறை கழல் சிலம்பு ஆர்க்க, நின்று ஆடிய அற்புதம் அறியோமே!
| [ 4]
|
மண்ணர்; நீரர்; விண்; காற்றினர்; ஆற்றல் ஆம் எரி உரு; ஒருபாகம் பெண்ணர்; ஆண் எனத் தெரிவு அரு வடிவினர்; பெருங்கடல் பவளம் போல் வண்ணர்; ஆகிலும், வலஞ்சுழி பிரிகிலார்; பரிபவர் மனம் புக்க எண்ணர்; ஆகிலும், எனைப் பல இயம்புவர், இணை அடி தொழுவாரே.
| [ 5]
|
Go to top |
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர்; மடமாதர் இருவர் ஆதரிப்பார்; பலபூதமும் பேய்களும் அடையாளம்; அருவராதது ஒர் வெண்தலை கைப் பிடித்து, அகம்தொறும் பலிக்கு என்று வருவரேல், அவர் வலஞ்சுழி அடிகளே; வரி வளை கவர்ந்தாரே!
| [ 6]
|
குன்றியூர், குடமூக்கு இடம், வலம்புரம், குலவிய நெய்த்தானம், என்று இவ் ஊர்கள் இ(ல்)லோம் என்றும் இயம்புவர்; இமையவர் பணி கேட்பார்; அன்றி, ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம்; வலஞ்சுழி அரனார்பால் சென்று, அ(வ்) ஊர்தனில் தலைப்படல் ஆம் என்று சேயிழை தளர்வு ஆமே.
| [ 7]
|
குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெரு உற, குல வரைப் பரப்பு ஆய கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி, மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன், வலஞ்சுழி எம்மானைப் பயில வல்லவர் பரகதி காண்பவர்; அல்லவர் காணாரே.
| [ 8]
|
அழல் அது ஓம்பிய அலர்மிசை அண்ணலும், அரவு அணைத் துயின்றானும், கழலும் சென்னியும் காண்பு அரிது ஆயவர்; மாண்பு அமர் தடக்கையில் மழலை வீணையர்; மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே.
| [ 9]
|
அறிவு இலாத வன்சமணர்கள், சாக்கியர், தவம் புரிந்து அவம் செய்வார் நெறி அலாதன கூறுவர்; மற்று அவை தேறன் மின்! மாறா நீர் மறி உலாம் திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப் பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில், அளவு அறுப்பு ஒண்ணாதே.
| [ 10]
|
Go to top |
மாது ஒர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயல் காழி நாதன் வேதியன், ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ்மாலை ஆதரித்து, இசை கற்று வல்லார், சொலக் கேட்டு உகந்தவர் தம்மை வாதியா வினை; மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே.
| [ 11]
|